’மெட்ரோ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிரிஷ், ’ராஜா ரங்குஸ்கி’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘பிஸ்தா’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து வரும் சிரிஷ், கொரோனாவால் பாதித்த ஏழை மக்களுக்கும், திரையுலகினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அத்தியாவாசிய மளிகை பொருட்கள், உணவு போன்ற உதவிகளை செய்து வந்த சிரிஷ், ஏழை மக்களின் உயிரை காக்கும் விதமாக, இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தி இருக்கிறார்.
சென்னையில் நடத்தப்பட்ட முதல் முகாமில் சுமார் 185 பேருக்கு நடிகர் சிரிஷ் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அதேபோல், இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட முகாமில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் 196 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3-வது முகாமில் பொதுமக்கள் 150 பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதோடு, அவர்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதில், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள், ஏடிஎம் காவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தாலும், சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிரிஷின் இத்தகைய செயல்களுக்கு திரையுலகினரிடம் மட்டும் இன்றி பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.