விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ படத்திலிருந்து இளையராஜாவின் இசை நீக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய அனுமதியின்றி இசையை நீக்கியதாக படக்குழுவினர் மீது இளையராஜா புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கடைசி விவசாயி’. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவரது இசையுடன் தான் கடைசி விவசாயி திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
இதனிடையே படக்குழுவினருக்கும் இளையராஜவுக்கும் இடையே பிரச்சனை உருவானதால், படத்திலிருந்து இளையராஜாவின் இசையை நீக்கி விட்டு அதற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையை கோர்த்துள்ளனர்.
இதனால் கடைசி விவசாயி திரைப்படம் இளையராஜா இசையில் வெளியாகுமா? அல்லது சந்தோஷ் நாராயணின் இசையில் இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இதனிடையே இந்த செய்தியறிந்த இளையராஜா தன்னுடைய அனுமதி இல்லாமல் படத்திலிருந்து இசையை நீக்கியதற்காக படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் கடைசி விவசாயி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கத்தின் மூலம் படக்குழுவினருடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.