நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது மக்களுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அங்கு நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது என செய்திகள் வெளியான நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்த யோகி ஆதித்யநாத் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார்.
யோகி ஆதித்யநாத்தின் அந்த கருத்தை கண்டித்து சித்தார்த் கூறிய எதிர்க்கருத்து தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மேலும் பாஜக தலைவர்கள் பலர் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அதனையடுத்து நடிகர் பாஜகவினர் மூலம் ஒரு நாளைக்கு 500 மிரட்டல் வருகிறது என நடிகர் சித்தார்த் கூறியிருந்தார்.
இதற்கு சமூகவலைத்தளத்தில் நடிகர் சித்தார்த்க்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு நடிகர் சித்தார்த், “எனக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்து என் அம்மா மிகவும் பயந்துவிட்டார். அவருக்குத் தைரியம் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, அதனால், உங்கள் ட்வீட்களைதான் அவர்களிடம் படித்தேன். என்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்த மிகவும் சாதாரண மனிதர்கள் நாங்கள். எங்களுக்கு உங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளும் அத்தனை மதிப்புமிக்கவை” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.