சென்னை:-
கொரோனா பரவும் சூழலில் அய்யனார் போன்று காவல் காக்கும் காவல்துறையினரே நிஜ ஹீரோக்கள் என நகைச்சுவை நடிகர் சூரி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு காவலர்களை சந்தித்த நடிகர் சூரி காவலர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், பணியில் இருந்த காவலர்களிடம் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூரி:-
தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி, கோடி நன்றிகள்.
எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லைச் சாமி. அதுபோல் தற்போது காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லைச் சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர். கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் இந்த கொரோனா காவல் துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை.
இதுவரை 75க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
சினிமாவில்தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகிய நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள்.
எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ்நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நம்மைப் பாதுகாப்பவர்களுக்குத் துணை நிற்போம் என்றார்.