தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் விரும்பக்கூடிய நடிகராக மாறிப்போனார். பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த “சாகோ” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை.
இதனையடுத்து கே.கி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். “சாலர்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை சுருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. சாலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல இந்தி இயக்குநர் ஓம் ராவத் இயக்கம் புதிய படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதிபுருஷ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது.
ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டவுள்ள இப்படத்தில் ராமனாக நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளார். படத்தில் சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சையிப் அலிகான் நடிக்கவுள்ளனர். அதே போல் லட்சுமணனாக இந்தி நடிகர் சுன்னி சிங் நடிக்கவுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.