ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா, கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து இருக்கிறார். இருவரும் கணவன்-மனைவியாகவே வருகிறார்கள். படம், வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் உள்பட தமிழ் பட உலகின் பிரபல நாயகர்கள் அனைவருடனும் ராதிகா ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
இப்போது அவர், ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சின்னத்திரை’யில் 23 வருடங்களாக நடித்து வருகிறார். இவருடைய அடுத்த தொடர், ‘சித்தி-2. தனது தந்தை ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது ராதிகா சரத்குமாரின் கனவு. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி விட்டார்.