மும்பை:
மும்பையில் பெண்களை ஆபாச படமெடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா (45), மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 19-ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஆபாச பட வழக்கில் தொடர்பு குறித்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் புறநகர் ஜூகுவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அதில் ஆபாச படதயாரிப்பில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். கணவர் ராஜ் குந்த்ரா அப்பாவி என்றும் விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர்.இதற்கிடையே, நேற்று ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது.