இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சனைகளால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக லைகா நிறுவனம் அளித்த புகாரில் “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. இயக்குனர் ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளம் 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
#Mudhalvan #Arjun #Shankar #Ramcharan #TeluguMovie #TamilThisai #Mudhalvan2 #cinemaUpdate #Cinemanews #cinematrending #LycaProduction