மும்பை:-
தங்களைப் பற்றி பொய் புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும், ஆபாசப்பட வழக்கில் சிக்கியவருமான ராஜ் குந்த்ராவும் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை ஆபாச ‘வீடியோ’ எடுத்து தனி இணையதளம் துவக்கி பதிவிட்டதாக புகார் எழுந்தது. போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில் ‘ஜாமின்’ பெற்றார்.
இந்நிலையில், ராஜ் குந்த்ராவுடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று கூறி நடிகை ஷெர்லின் சோப்ரா 2021 ஏப்ரல் மாதம் ஜுஹு காவல் நிலையத்தில் ராஜ்குந்த்ரா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார். இதை தொடர்ந்து ராஜ்குந்த்ரா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 19 அன்று, ராஜ் குந்த்ரா சோப்ரா வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியதாக சோப்ரா கூறி ஏப்ரல் 20, 2021 அன்று ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதனிடையே ஷெர்லின் சோப்ரா அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மோசடி, மிரட்டல், துன்புறுத்தல் குறித்து மீண்டும் புகார் அளித்து உள்ளார்.
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் நடிகர் ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது,
விளம்பரம் தேடும் நோக்கில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. அவதுாறு ஏற்படுத்துதல் மற்றும் பணம் பறித்தல் இதன் நோக்கமாக உள்ளது.
வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஷில்பா ஷெட்டி மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. எனவே பத்திரிகைகள் மற்றும் ‘டிஜிட்டல் மீடியா’ வாயிலாக ஏழு நாட்களுக்குள் பொது மன்னிப்பு கோருவதுடன், 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.