கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், தமிழக அரசு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது.
இந்நிலையில், திரையரங்கில் 100 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனைப் பரிசீலனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அனுமதியை வழங்கி அரசாணை ஒன்றை நேற்று பிறப்பித்தார்.
இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், திரையரங்கில் 100 சதவிகித அனுமதி குறித்து சிலர் தங்களது மாற்றுக் கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “100 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்குவது குறித்து மாற்றுக்கருத்து உடையவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு பயம் இருந்தால் திரையரங்குகளுக்குச் செல்லாதீர்கள். உங்களது பயம் புரிகிறது. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.