லைகா நிறுவனம் தயாரிப்பில், புதிய திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு “மக்களை இன்னும் அதிகமாக சிரிக்க வச்சுட்டு தான் இந்த உசுரு போகனும்” என்று பேசியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல், அதிகமாக நடிக்காமல் இருந்தார் வடிவேலு. இடையே மெர்சல் உள்ளிட்ட ஓரிரு படங்களில் மட்டும் நடித்திருந்தார். தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான அறிமுக நிகழ்ச்சியில் வடிவேலு கலந்து கொண்டு பேசினார்.
கடந்த வருடங்களில் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாகத்தான் இருந்தது. ஆனால் அதிலிருந்து நான் தப்பிவிட்டேன். எனக்கு ஏற்பட்ட துன்பம் போன்ற துன்பத்தை யாரும் அனுபவிக்க முடியாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி வந்து அடித்தது. கொரோனா வந்தபின் என் பிரச்சனைகள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது. இனி வரும் காலங்களில் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன்.
முதல்வரை சந்தித்து விட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாக நடைபெற்றது. இனி என் பயணம் நகைச்சுவை பயணாகத்தான் இருக்கும். இன்னும் மக்களை அதிகமாக சிரிக்க வைத்துவிட்டு தான் என் உயிர் போகும். மறைந்த நடிகர் விவேக்கின் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டியுள்ளது. “எனக்கு எண்டே கிடையாது” என்று கூறியுள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்