நடிகர் விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் வெங்கட கிஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கவுள்ளார்.
விவேக் , மோகன் ராஜா, ரித்விகா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. வித்தியாசமான கெட்டப்பில் விஜய்சேதுபதி டீசரில் தோன்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் இயக்குனர் இதுக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பார்ந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கு… மன்னிக்கவும்… இதுவரை நான் இயக்கிய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் பற்றிய அத்தனை அப்டேட்களையும் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்தமுறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ, வெளிவந்த டீசரையோ நான் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்கான டீசர் வெளிவருகிறது என்று எனக்குத் தெரியாது. கூடவே, மிக முக்கியமான தகவல், அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸாகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.
திரும்பவும் மன்னிக்கவும். நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்தப் படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக் கூடிய, நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல், பின்னணி இசை கோர்க்கப்படாமல், கலரிங் செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது. தயாரிப்பு தரப்பிடம் இந்தக் குளறுபடிக்கான அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முகநூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.