இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று(ஆகஸ்ட் 19) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை போல அலங்கரித்தும் கிருஷ்ணர் சிலைகளை வீட்டில் வைத்து கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு பதார்த்தங்களை வைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் காலையில் இருந்தே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணர் பிறந்த ஊராக கருதப்படும் உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் கோகுலாஷ்டமி விழா களைகட்டியுள்ளது.
அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான வெண்ணெய், அப்பம், பொறி, அவல், வெல்லம், சீடை, கொழுக்கட்டை உள்ளிட்டவை வைத்து பூஜை செய்யப்பட்டது. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனைபாடி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.