சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அரண்மனைக்காரன் தெரு.
அரண்மனைக்காரன் தெரு என்று அழைக்கப்படும் இத்தெருவில் உண்மையில் எந்தவொரு அரண்மனைகளும் இருந்ததில்லை பிறகு இப்பெயர் எப்படி வந்தது. இங்கு ஒரு காலத்தில் அதிக அளவில் அர்மீனியர்கள் வசித்தார்கள். அவர்களின் பெயரிலமைந்த “அர்மீனியன் தெரு” பின்னாளில் “அரண்மனைகாரன் தெரு” என்று மாற்றம் பெற்றது. இது பெரும்பாலான சென்னைகாரர்களுக்கு தெரியாத ஒன்று.
சென்னை பாரிமுனையின் பழமைக்கு அடையாளமாக நிற்கிறது அர்மீனியன் சர்ச். கிழக்கு ஐரோப்பியர்களான அவர்கள் 16ம் நுாற்றாண்டில் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்தனர். அவர்கள் நாடு முழுதும் பரவித் தங்கினர். சென்னைக்கு கப்பலில் வந்த இவர்கள் உயர் ரக துணிகள், வைரக்கற்களை விற்பனை செய்தனர். “சௌத் ப்ளாக் டவுன்” என்று அழைக்கப்பட்டு பின் ஜார்ஜ் டவுனாக மாறிய சென்னை பாரிமுனையில் 1712ல் வெர்ஜின்மேரி சர்ச் கட்டப்பட்டது. அதுவே பின் அர்மீனியன் சர்ச் என்று அழைக்கப்படுகிறது. கல்லறை வளாகத்தின் ஒரு பகுதியில் இந்த சர்ச் கட்டப்பட்டு பின்னர் 1772ல் புதுப்பிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகை போல் காட்சியளிக்கும் பிரார்த்தனை அறை மேடையில், கன்னி மேரி (Virgin Mary) குழந்தை இயேசுவுடன் இருக்கும் ஆளுயர படம் உள்ளது.
ஏனெனில் அர்மீனியர்களுக்கு சிலை வழிபாட்டில் நம்பிக்கை கிடையாது. அதனால் படங்களை மட்டுமே வைத்து வழிபட்டார்கள்.
சர்ச்சுக்கு வெளியே சென்னையில் வாழ்ந்து இறந்த அர்மீனியர்கள் சுமார் 350 பேரின் கல்லறைகள் உள்ளன.
அங்குள்ள மணிக்கூண்டும், ஆறு ராட்சத மணிகளும் சிறப்பு பெற்றவை. ஒவ்வொரு மணியும் 21-26 அங்குலமும், 150- 200 கிலோ எடையுடன் உள்ளன. சர்ச் வராண்டாக்களில் பென்சிலால் வரையப்பட்ட ஓவியங்கள் அர்மீனியர்களின் கலைத் திறனை பறைசாற்றுகின்றன.
வராண்டா சுவர்களில் செதுக்கப்பட்டு உள்ள ஏஞ்சல்களின் உருவங்கள் அதன் மீது பூசப்பட்ட பச்சை, சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணங்கள் மூன்று நுாற்றாண்டுகளை கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் இருப்பது அர்மீனியக் கட்டடக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது.
சென்னையைச் சேர்ந்த ஆங்கிலோ-இந்தியரான ட்ரெவர் அலெக்சாண்டர் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து சர்ச்சை பாதுகாத்து வந்த தகவல் சர்ச் வட்டாரங்களில் ஆர்வமாக பேசப்படுகிறது. அர்மீனியன் தெரு என்ற பெயரை தாங்கும் அளவுக்கு சிறப்புகள் வாய்ந்த இந்த சர்ச் உலக அளவில் பிரசித்தி பெற்றது.
ஆனால் இந்த சர்ச்சை கட்டிய அர்மீனியர்கள் ஒருவர் கூட தற்போது சென்னையில் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனாலும் அவர்களின் பெயர் தாங்கி நிற்கும் இந்த சர்ச்சும், தெருவும் அவர்களை நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கும்.