திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பிளாஸ்டிக்கை பயன்பாட்டை அறவே தடுத்து சுற்றுசூழலை பாதுகாக்கவும்; பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி குடிநீர் பாட்டில் விற்பனை திருமலையில் அமல்படுத்தப்பட உள்ளது.
திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இதனால், தினசரி லட்ச கணக்கான பக்தர்களின் போக்குவரத்து திருப்பதி-திருமலை இடையே நடைபெறுகிறது.
வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால், திருமலையில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
தற்போது பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க திருமலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்,பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணி பைகளும், லட்டு கவர்களுக்கு பதில் அட்டை, துணி பைகளும் வழங்கப்படுகிறது. இதனையும் மீறி பிளாஸ்டிக் பைகளை உபயோகித்தால் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், திருமலையில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களையும் தேவஸ்தானம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பதில், ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களும் அமைத்தது.
ஆனால், பக்தர்களுக்கு இது வசதியாக இல்லை. ஏனெனில் தேவைப்படும்போது குடிக்க தண்ணீர் கிடைக்காமல் பல இடங்களுக்கு அலைய வேண்டி உள்ளது. இதனைதடுக்க, கண்ணாடி குடிநீர் பாட்டில்களை தேவஸ்தானம் திருமலையில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.
இதற்கு ஒரு தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்துள்ள கண்ணாடி தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் ரூ.20 என நிர்ணயித்துள்ளது.
ஆனால் இந்த கண்ணாடி பாட்டில்களை வெளியே கொண்டு செல்ல வேண்டுமானல் கூடுதலாக ரூ.20 அந்த கடைகளில் டெபாசிட் செய்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை பக்தர்கள் கொண்டு செல்லலாம்.
இந்த பாட்டிலை வேறு எந்த கடையில் கொடுத்தாலும் பக்தர்கள் செலுத்திய டெபாசிட் பணம் ரூ.20 திருப்பி கொடுக்கப்படும்.
இந்த புதிய திட்டம் ஓரிரு நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.