திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பக்தர்களுக்கு சலுகை விலையில் 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது.
இலவச லட்டு போக, கூடுதலாக தலா 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதற்காக கோயிலுக்கு வெளியே கூடுதலாக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.
நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தினந்தோறும் 25 கிராம் எடை கொண்ட சிறிய லட்டு அல்லது சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்ற அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 175 கிராம் எடையுள்ள ரூ.40 மதிப்புள்ள ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
அதன்படி தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.