போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி விலையயுர்ந்த லக்சூரி காருக்கு போலீஸார் ரூ. 27.68 லட்சம் மதிப்பில் அபராத செல்லாண் வழங்கியுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக புதிய மோட்டார் வாகன சட்டம், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டு வரும் அபராதம் இதய துடிப்பையே நிறுத்தும் வகையில் இருக்கின்றது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மேற்கூறியதைப் போன்றே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
வாகன தணிக்கையில் விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றான போர்ஷே 911 என்ற கார் பதிவெண் இல்லாமல் வலம் வந்ததைக் கண்டுள்ளனர். பின்னர், காரை மடக்கியப் போலீஸார், அந்த விலையுயர்ந்த காரின் ஆவணங்கள் குறித்து பரிசோதனையை மேற்கொண்டனர். அப்போது, நம்பர் பிளேட்டைப் போன்றே ஆவணங்களும் இன்றி அந்த கார் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
அதிர்ந்துபோன போலீஸார், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, அந்த போர்ஷே காருக்கு ரூ. 9.80 லட்சம் மதிப்பில் அபராத செல்லாண் வழங்கியது.
இந்த அபராத செல்லாண் வழங்கி 6 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அதனை போலீஸார் மறு பரிசீலனை செய்துள்ளனர். இதனால், முன்னதாக 9.80 லட்சம் ரூபாயாக இருந்த அபராதத் தொகை தற்போது ரூ. 27.68 லட்சமாக உயர்ந்துள்ளது. எனவே, ஏற்கனவே உச்சபட்சமாக காணப்பட்ட அபராதத் தொகை இப்போது அதீத உச்சபட்சமாகியுள்ளது.