12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் ஓடவில்லை. வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும், தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள் அன்னிய நேரடி முதலீடு தனியார்மயமாக்கல் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜனவரி 7ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு 10 மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி இன்றைய தினம் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வங்கிகள்,போக்குவரத்து துறை உட்பட பல துறைகளை சேர்ந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அதன் சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 25 கோடி பேர் பங்கேற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
ஆனால் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் வேலை நிறுத்த போராட்டத்தால் பஸ்கள் குறைவாகவே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.