விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே இந்திய அணி 4-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று(02.02.2020) நடைபெறுகிறது.
ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து வரும் பிப்ரவரி 21ம் தேதியன்று தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலிருந்து முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்கான அறுவை சிகிச்சை முடிவடைந்து போட்டிகளில் பங்கேற்க தயாராகி வந்த ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து-ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல்தர டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக
இந்திய அணியில் இடம்பெற்று கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கைக்குரிய வகையில் பேட்டிங், ஃபீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் பங்களிப்பினை அளித்து வந்த ஹர்திக் பாண்டியா இல்லாதது டெஸ்ட் அணியின் சமநிலையில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் இந்திய அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ரஞ்சி போட்டியின் போது கணுக்காலில் காயம் அடைந்துள்ளதும் அணி நிர்வாகத்துக்கு மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஹர்திக் பாண்டியா நீக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மற்ற வீரர்கள் யார் என்று பிசிசிஐ யின் அறிவிப்புக்கு பின்னரே தெரிய வரும்.