மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதுக்கு ஆரஞ்சு பழ வியாபாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசின் பத்மஸ்ரீ பத்மபூஷன் பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் 141 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல புகழ் பெற்ற நபர்களின் பெயர்களும், பிரபலமே இல்லாத நபர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.அதில் ஒருவர்தான் கர்நாடகாவில் ஆரஞ்சு பழ வியாபாரம் செய்யும் ஹரேகலா கஜப்பா.
சிறுவயதிலேயே படிக்கும் வாய்ப்பை இழந்த ஹரேகலா, தெருத்தெருவாக சென்று பழங்கள் விற்பனை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பள்ளிக்கு நிலத்தை வாங்கினார்.
2000 ஆண்டில் முதல் முறையாக அவர் வாழ்ந்த கிராமத்தில் பள்ளி அமைக்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த ஹரேகலா கஜப்பா தொடர்ந்து ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார்.
இவரின் சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
பழம் விற்பனை நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு தேவையான நீரை காய்ச்சி தருவதும் வகுப்பறையை சுத்தம் செய்வதுமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
கடந்த 25ஆம் தேதி ரேஷன் கடையில் வரிசையில் நின்று இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரேகலா கஜப்பா என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் நாட்டின் உயரிய விருது வழங்கப்படுவது சந்தோசமாக இருப்பதாக கூறியுள்ளார்.