நீமுச்:-
மத்தியபிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் வங்கிக்குள் நுழைந்து ரூ.10 லட்சம் பணத்தை வெறும் 30 நொடிகளில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள ஜவாட் (Jawad) பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
வங்கிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் அடையாளம் காண்கின்றனர். அந்த வகையில் நீமுச் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில், குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவியை ஆய்வு செய்தனர். அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் கொள்ளையில் ஈடுபட்டது 10 வயது சிறுவன்.
பணப்பரிவர்த்தனை செய்வதற்காக வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அப்போது வங்கி கேஷியர் அந்த இடத்தில் இருந்து வெளியே செல்கிறார். அப்போது டிப் டாப்பாக உடையணிந்த சிறுவன் ஒருவன் அந்த அறைக்குள் நுழைந்து அங்கே இருந்த ரூ.500 நோட்டுக் கட்டுகளை தனது பைக்குள் போட்டு நடந்து செல்கிறார். உயரம் குறைவாக இருப்பதால் சிறுவன் வந்தது கூட அங்கு நின்ற வாடிக்கையாளர்களுக்கு தெரியவில்லை. 30 விநாடிகளுக்குள் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் அந்தச் சிறுவன் ஆங்கிலத்தில் அங்கிருந்தவர்களிடம் சரளமாக உரையாட உள்ளார் என்று கூறப்படுகிறது. மேஜையில் உள்ள பணக்கட்டு காணவில்லை என்பதை அறிந்த கேசியர் உடனடியாக அலாரத்தை ஒலிக்க செய்துள்ளார். அதற்குள் சிறுவன் வெளியே ஓடிவிட்டான். இதைக்கண்ட வங்கி பாதுகாவலர் துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். அப்பொழுது சிறுவனுடன் வந்த நபரும், சிறுவனும் வெவ்வேறு திசைகளில் தப்பியுள்ளனர்.
சிசிடிவியை மேலும் ஆராய்ந்த போது, 20 வயது இளைஞர் ஒருவர் சிறுவனுடன் வந்திருந்தது தெரியவந்துள்ளது. உள்ளே நின்றிருந்த அந்த இளைஞர், கேஷியர் எழுந்து சென்றவுடன் சிறுவனுக்கு சிக்னல் கொடுத்து உள்ளே வரவைத்துள்ள காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.