சத்தீஷ்கர் மாநிலத்தில் 10 வயது சிறுவன் 100 மணி நேர பேராட்டத்திற்கு பின் ஆழ்துளை கி்ணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ஜான்ஜ்கீர்சம்பா மாவட்டம் பிஹிரித் என்ற கிராமத்தைச் சேரந்த ராகுல் ஷாகு என்ற 10 வயது சிறுவன் ஆள்துளை கிணற்றில் கடந்த 11-ம் தேதி மாலை தவறி விழுந்தான்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், மீட்பு படை மற்றும் 25 ராணுவ வீரர்களும் சேர்ந்து சிறுவனை மீட்க இறங்கினர். மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீட்பு நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் 80 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதால் மீட்கும் நடவடிக்கையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.
இதனிடையே மீட்பு படையினர் விடா முயற்சியுடன் போராடி பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, சுமார் 100 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின் நேற்று இரவு 11: 50 மணி அளவில் சிறுவனை உயிருடன் மீட்டனர். மேலும் தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பிலாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து சிறுவனை கண்காணித்து வருகி்ன்றனர்.
இந்நிலையில் சிறுவனை உயிருடன் மீட்ட மீட்புப்படையினர், மாவட்ட கலெக்டர் ஆகியோரை முதல்வர் பூபேஷ் பாகல் வெகுவாக பாராட்டியதுடன், ராகுல் சாகுவிற்காக பிரார்த்தனை செய்ததாகவும், பிரார்த்தனை வீண்போகவில்லை என்றும் மருத்துவமனையில் இருந்து குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.