கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மொத்த வர்த்தகமும் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. உலகில் மாபெரும் கோடீஸ்வரர் முதல் தினக்கூலி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரவர்களுக்கு அவரவருக்கு ஏற்ற பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக அளவில் பெரும்பாலோனோர் வேலையிழக்க நேரிடும் என்று ஐநா சபை எச்சரித்திருந்தது. இதனால் ஐடி ஊழியர்கள் பலர் எங்கே தங்கள் வேலை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இருந்தனர்.
இந்நிலையில் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விவரங்களை மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது டிசிஎஸ் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் வெளியிட்டார். டிசிஎஸ் நிறுவனத்தில் 4.5 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு பெருமளவில் லாபத்தை ஈட்டியுள்ள போதிலும், கொரோனா தொற்று காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். ஆனாலும் பணியாளர்கள் யாரையும் வேலையை விட்டு அனுப்பும் எண்ணம் இல்லை என்று கோபிநாதன் கூறினார்.
அதேவேளையில் இவ்வாண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். கல்லூரி வளாக நேர்காணல்களில் (Campus Interview) பணிக்குத் தேர்வான 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் டிசிஎஸ் நிறுவறுவனத்தில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் ராஜேஷ் கோபிநாதன் உறுதிபடத் தெரிவித்தார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஜனவரி 16, 2020 அன்று 2,242 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்று அதே டிசிஎஸ் நிறுவன பங்கின் விலை 1,806 ரூபாய்க்கு சரிந்து இருக்கிறது. கடந்த ஜனவரி 16, 2020 அன்று டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8,41,284 கோடி. ஆனால் இன்று வர்த்தகம் நிறைவடைந்த பிறகு டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6,77,980 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது.