கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் உள்ள மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா:-
மேற்கு வங்காளத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். இதே போல கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென செவிலியர்கள் பலர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் பல்வேறு நகரங்களில் உள்ள அப்பல்லோ, ஆர்.என். தாகூர், டாட்டா, ரூபி, ஏ.எம்.ஆர்.ஐ, ஃபோர்டிஸ், பீர்லெஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.
இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது. எனினும் அதிக எண்ணிக்கையில் செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் எதுவும் வெளிவரவில்லை.
கொரோனா பாதிப்பு நெருக்கடியில் மேற்கு வங்காள அரசு மற்றும் மக்கள் சிக்கியுள்ள நிலையில், செவிலியர்களின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மணிப்பூர் அரசு 185 செவிலியர்கள் மற்றும் பிற நபர்கள் 133 பேருக்கு பயண அனுமதி சீட்டு (Transit Pass) வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.