கர்நாடக மாநிலத்தில் தனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ள மியபுரா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது 2 வயது குழந்தைக்கு பிறந்த நாள் என்பதை அடுத்து அருகிலிருந்த அனுமான் கோவிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று வழிபட்டார்.
பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ல அந்த கிராமத்தினர் தடை விதித்துள்ளதால் அவர்கள் கோயிலின் வெளியே நின்று அவர்கள் வழிபட்டனர்.
அப்போது. குழந்தை திடீரென கோயிலுக்குள் ஓடி, சாமி கும்பிவிட்டு திரும்பியது என்று கூறப்படுகிறது. இதைக் கண்ட அந்தப் பகுதியினர் பட்டியலின குழந்தை எப்படி கோயிலுக்குள் செல்லலாம்? என பிரச்னையாக்கினர்.
இதையடுத்து அந்த கிராமத்தினர் கூடி பேசி, கோவிலின் புனிதத் தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்காக பூஜை செய்ய வேண்டும் என கோயிலுக்குள் குழந்தை சென்றதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்கான பூஜைக்காக இந்த தொகையை அபராதமாக விதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீ சார் மியபுரா கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோப்பல் நகர போலீஸ் எஸ்.பி டி.ஸ்ரீதர் கூறும்போது,
சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தோம். மக்களுக்கு அறிவுரை செய்தோம். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்ட னர்’ என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.