புது டெல்லி:-
டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியான கஜுரி காஸ் என்ற இடத்தில் வசித்து வந்த சல்மான் என்கிற ஆர்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலை மிரட்டல் விடுக்கும் போது, போதைப் பொருள் பயன்படுத்தியிருந்ததும், அவரது தந்தை திட்டியதால், வீட்டிலிருக்க பிடிக்காமல், இவ்வாறு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சல்மானிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், தான் வெளியே இருக்க விரும்பவில்லை, சிறைக்குச் செல்லவே விரும்புகிறேன் அதனால்தான் இவ்வாறு பிரதமருக்கு மிரட்டல் விடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சல்மானை தனிப்படை பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் சல்மான் உளவுப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவித்தனர்.
ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்ததும் போதைப் பழக்கம் கொண்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.