புது டெல்லி :
மனித உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ன் கீழ்1993ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
மனித உரிமைகள் எந்த வகையில் மீறப்பட்டாலும் அதனைக் குற்றமாக எடுத்துக் கொள்ளும் இந்த ஆணையம், அது குறித்து விசாரணை நடத்துகிறது.
மனித உரிமைகள் மீறப்பட்ட விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் இதர நிவாரணம் மற்றும் தவறிழைத்த அரசு ஊழியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அரசு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. 28வது நிறுவன தினத்தை ஒட்டி காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது மனித உரிமையை காப்பதில் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டியாக செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உலகளவில் மனித உரிமைகள் பாதுகாப்பின் முகமாக தேச தந்தை மகாத்மா காந்தி விளங்குவதாகவும் தெரிவித்தார்.
முதல் உலக போரில் பெரும்பாலான நாடுகள் மனித உரிமைகளை மீறிய போதும், இந்தியா மனித உரிமைகள் பாதுகாப்பு மீது மிகுந்த அக்கறை கொண்டு இருந்ததாக தனது உரையில் குறிப்பிட்டார்.
அசாதாரண சூழ்நிலைகளின் போதும் அமைதியான வழியில் பயணித்து உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக விளங்கி வருவதாகவும் பெண்களின் பாதுகாப்புக்காக, 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மருத்துவம், காவல்துறை, மனநல ஆலோசனை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்குவதற்காக one-stop centres அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நமது அரசியலைப்பு சட்டம் சமத்துவம் வாய்ந்த சமுதாயத்திற்கு வழிவகை செய்து இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.