பெங்களூரு:-
3 வயது சிறுவனை வீடு புகுந்து தூக்கிச்சென்ற சிறுத்தை அந்த குழந்தையை கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரு ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கடரையானபாளையா (Kadaraiahanapalya) பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்-கௌரி தம்பதி. இவர்களது இரண்டாவது மகன் ஹேமந்த் (3).
சந்திரசேகரின் வீடு வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அதிக புழுக்கம் காரணமாக வீட்டில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அயர்ந்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஹேமந்தை தூக்கிச்சென்றது. வீட்டினர் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் சிறுவனை தூக்கிச்சென்றது அவர்களுக்கு தெரியவில்லை.
அதிகாலை 5 மணி அளவில் ஹேமந்த் காணாமல் போனதை கண்டு அவரது தாயார் அதிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் சிறுவனை அக்கம், பக்கம் தேடினர். அங்கு ஒரு மரத்தடியில் கடித்து குதறிய நிலையில் சிறுவனின் சடலம் கிடந்தது. அருகில் சிறுத்தையின் காலடித்தடங்களும் கிடந்தது.
இதைப்பார்த்து சிறுவனின் பெற்றோர் கதறியழுதுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் வனத்துறை மந்திரி B.S.ஆனந்த் சிங் மற்றும் பெங்களூரு புறநகர் தொகுதி எம்.பி. டி.கே.சுரேஷ், மகாடி MLA மஞ்சுநாத் ஆகியோர், குழந்தையின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மந்திரி ஆனந்த்சிங் அறிவித்துள்ளார்.