இந்தூர்:-
மருத்துவர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, மத்தியபிரதேசத்தில் 3,000 மருத்துவர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை “சட்டவிரோதமானது” என்று கூறியதால், ம.பி.ல் உள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் நான்கு நாட்களாக, உதவித்தொகை உயர்வு மற்றும் கோவிட் -19 பாதிக்கப்பட்டால் தங்களுக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஜூனியர் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே, வேலைநிறுத்தம் செய்யும் ஜூனியர் மருத்துவர்களை 24 மணி நேரத்திற்குள் மீண்டும் பணியில் சேருமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது, மேலும் நான்கு நாள் வேலைநிறுத்தத்தை “சட்டவிரோதமானது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலத்தின் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜூனியர் மருத்துவர்கள் வியாழக்கிழமை தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்து, அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு ராஜினாமாவை சமர்ப்பித்ததாக மத்தியப் பிரதேச ஜூனியர் டாக்டர்கள் சங்கத்தின் (எம்.பி.ஜே.டி.ஏ) தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா தெரிவித்தார்.