இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .
இந்நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். குறிப்பாக டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் டெல்லி உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா சிகிச்சை மையத்தை ஏற்படுத்துமாறு டெல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம், ஐந்து நட்சத்திர ஹோட்டலான அசோகாவில் 100 அறைகளைக் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்து, அதுதொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ப்ரிமஸ் என்கிற தனியார் மருத்துவமனை நிர்வகித்து சிகிச்சை அளிக்கும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.