டெல்லி:-
கடந்த ஆண்டில் நாடு முழுவதும் தினமும் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 46 பலாத்கார வழக்குகள் வந்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நாட்டின் குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிடும். அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 2020ல் நாடு முழுவதும் மொத்தம் 28,046 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 28 ஆயிரத்து 153 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 77 பலாத்கார வழக்கு என்ற வீதத்தில் பதிவாகி உள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் 25,498 பேர் 18 வயதை தாண்டியவர்கள், 2,655 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறுமிகள் ஆவர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 310 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதேசமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 2019ஆம் ஆண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 236 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரம் 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.