லூதியானா:-
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சி அதிகாரிகள் இஷார் நகரில் (Ishar Nagar) சாலையில் தனித்து விடப்பட்டிருந்த நாய் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் பிடித்து காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அப்போது அந்த நாயால் அவர்களுக்கு இவ்வளவு செலவாகும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆம், அந்த நாய்க்கு உணவளிக்க கடந்த 2 மாதங்களாக ரூ.6,000க்கும் மேல் செலவாகியுள்ளதால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
பிட் புல் (Pit Bull) கையை சேர்ந்த அந்த நாய் சிக்கனை தவிர வேறு எந்த உணவையும் சாப்பிடுவதில்லை. இதனால் ரூ.6,000க்கும் மேல் பில் வந்துள்ளது. அந்த நாய் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுவதால் தனி கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி Dr ஹர்பன்ஸ் தல்லா (Harbans Dhalla) கூறுகையில்:-
சிலரின் உதவியால் கடந்த மே மாதம் நாயின் உரிமையாளரை கண்டுபிடித்தோம். அவர் ஒரு பெண்மணி ஜமால்பூர் பகுதியை சேர்ந்தவர். அவர் தற்போது பாட்னாவில் இருப்பதாகவும், ஊரடங்கு முடிந்து ஊர் திரும்பிய பிறகு நாயை மீட்டுக் கொள்வதாகவும் கூறினார். மேலும் நாயுடன் இருக்கும் அவரது புகைப்படத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. வேறு யாரிடமாவது நாயை ஒப்படைக்கலாம் என்று பார்த்தால் அதுவும் வழியில்லை. ஆக்ரோஷமாக இருக்கும் இந்த நாயால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த முடிவையும் கைவிட்டோம். காப்பகத்தில் இருக்கும் ஊழியர்கள் கூட அதன் அருகில் செல்ல அஞ்சுகின்றனர் என கூறியுள்ளார்.
அதனால் நாயின் உரிமையாளரிடம் ஒப்படைப்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என முடிவு செய்த அதிகாரிகள் ஜூன் 2-ம் தேதி ஜமால்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாய் மற்றும் அதன் உரிமையாளரின் புகைப்படம் ஜமால்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படுள்ளது.
நாயின் உரிமையாளர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 9815091107 என்ற எண்ணில் தொடர்பு அணுகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஒருவேளை நாயை மீட்க யாரும் வரவில்லை என்றால், அதன் உணவு பழக்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.