மும்பை அருகே நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவதுண்டு. மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தநிலையில் சொகுசுக் கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் பயணிகள் போல படகில் ஏறினர். படகு மும்பையில் இருந்து கிளம்பி கடலுக்குள் பயணித்த போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து பண்டல் பண்டலாக கொகைன், கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வாங்கி ஆய்வு செய்து வருகின்றனர். ஆர்யன் யார் யாருடன் பேசினார்? அவருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். நடிகர் ஷாருக்கானின் மகன் போதை வழக்கில் சிக்கியிருப்பது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சா.கற்பகவிக்னேஷ்வரன்