சென்னை :
ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கிய ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம் தொல்லியல் ஆவணப்படத்தை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தனது நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் ஆதி மனிதர்களான ஆப்ரிக்க பழங்குடிகளின் மரபியல் கூறுகளுக்கும், ஆதிச்சநல்லுாரில் வாழ்ந்த மனிதர்களின் மரபியல் கூறுகளுக்கும் தொடர்பு உள்ளதை, அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் ஆதிச்சநல்லுாரில் கள அருங்காட்சியகம் அமைய உள்ளது. ஆதிச்சநல்லுாரில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு செய்யப்பட்ட விதம், அதில் கிடைத்த தொல்பொருட்கள், அதற்கும் தமிழர்களின் நாகரிக பழமைக்குமான தொடர்பு போன்றவற்றை விளக்கும் வகையில், ‘ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம்’ என்ற ஆவணப்படத்தை ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கியுள்ளார்.
ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடியது. இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வலைதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.
இந்தியநாட்டில் முதன் முதலாக துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் தான் அகழாய்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படத்தை காண https://www.cict.in/veliyeedugal_kanoli-padangal.php என்ற இணைப்பை பயன்படுத்தலாம் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.