கோழிக்கோடு:-
கேரளவில், விபத்துக்குள்ளான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் இரு முறை தரையிறங்க முயற்சித்த தகவல் வெளியாகி உள்ளது.
துபாயிலிருந்து 191 பேருடன் வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ (IX1344) விமானம், கோழிக்கோடு அருகே கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று(ஆக.7) இரவு 7.40 மணியளவில், தரையிறங்கிய போது, நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஓடு பாதைக்கு எதிர்திசையில் சென்ற விமானம் பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், இரு விமானிகள், ஒரு குழந்தை உட்பட 18 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, விமான விபத்தில் பலியான விமானி கேப்டன் தீபக் வசந்த் சாதே, விமானப்படையில் பணியாற்றியவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விபத்துக்கு முன்னர், இருமுறை தரையிறங்க முயற்சித்ததாக பிளைட்ரேடார்24 (FlightRadar24) எனும் விமானங்கள் தொடர்பான இணையதளம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ (IX 1344) விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர், கடும் மழை பெய்ததால் பல முறை வானில் வட்டமடித்துள்ளது. மேலும், இரு முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டேபிள் டாப்’ வகை விமான நிலையம்:-
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் ‘டேபிள் டாப்’ வகை விமான நிலையம் ஆகும். ‘டேபிள் டாப்’ விமான நிலையங்களின் ரன்வே மலை மீது அல்லது உயரமான இடத்தில் இருக்கும். ரன்வே தாண்டி சென்றால், பள்ளம் இருக்கும் என்பதால், இங்கு விமானத்தை தரையிறக்குவது சவாலான காரியம். இதனால் போயிங் உள்ளிட்ட பெரும் விமானங்கள் இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் தவிர்த்து, கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையம், மிசோரம் மாநிலத்தில் லங்புங் விமான நிலையம் ஆகியவை டேபிள் டாப் வகை விமான நிலையங்களாகும்.