இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தியாவில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை கண்டிராத மோசமான நிலையை அமெரிக்கா தற்போது சந்தித்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இந்தச் சிறப்பு விமானங்கள் மூலமாக இதுவரை 50 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவுத்துறை சார்பில் தனி விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் செல்வதற்காக இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்களில் 10 பேர் மட்டுமே அமெரிக்கா செல்ல ஒப்புக் கொண்டனர், மற்றவர்கள் இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 24 ஆயிரம் அமெரிக்கர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை அமெரிக்க மற்றும் இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.