புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ரபிஹா என்ற மாணவி தனக்கு வழங்கிய தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் வருகையின்போது, தங்கப் பதக்கம் பெற இருந்த ரபிஹா என்ற மாணவியை காவல்துறையினர் அரங்கிலிருந்து வெளியேற்றி உள்ளனர். பின்னர் குடியரசுத் தலைவர் சென்ற பிறகு தனது தங்கப்பதக்கத்தை மேடையில் வாங்க மறுத்து உள்ளார். இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்தப் பெண் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக குடியரசுத் தலைவர் முன்பு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக பேசி விடுவார் என்பதற்காக வெளியேற்ற பட்டதாகவும் கூறப்படுகின்றது.நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.