புதுச்சேரி:
வெட்டுக்காயங்களுடன் ஆற்றில் இரவு முழுவதும் போராடிய நபரை மறுநாள் காலையில் பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
புதுச்சேரி அய்யங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (25). இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக வானூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காலை புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் சங்கரபரணி ஆறு வழியாகச் சென்ற பொதுமக்கள், ஆற்று புதருக்குள் வெட்டப்பட்டு காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே, அங்கு விரைந்து சென்ற வில்லியனூர் போலீசார், மருத்துவர்கள் உதவியுடன் அந்த நபரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.விசாரணையில் அவர் தான் கடத்தப்பட்ட அந்த அரவிந்த் என தெரியவந்துள்ளது.
அரவிந்த், ‘ரௌடி கொக்கு கார்த்தி’ என்பவற்றின் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்துள்ளார். அதன் காரணமாகவே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரவிந்தைக் கடத்திச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.