நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்குக்கு (Janatha Curfew) பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள், பயணிகள் ரயில்,மெட்ரோ ரயில்கள், லைப்ரரி, உணவகங்கள், மளிகை கடைகள் போன்றவை இயங்காது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அண்டை மாநிலங்களான கர்நாடகம்,கேரளம், ஆந்திரா போன்ற மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தவிர்த்து பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை.
அதேவேளையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மருந்துவ பொருட்கள்,பால், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவை கொண்டு வரும் வாகனங்கள் பரிசோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் மக்களுக்கு அச்சத்தை போக்கவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் இந்த கூட்டுதொடர் அவசியம் என்று எடப்பாடி தெரிவித்தார். இந்த நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.