பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிப்பதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் மத்திய பிரதேசம் இந்துாரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில், 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதில், ஒன்றான ஏஒய். 4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் புதிய தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் உருமாறிய ஏஒய். 4.2 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போது பீதி அடைய தேவையில்லை என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், மரபணு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்கவும், கொரோனா 4.2 வைரஸ் பரவுவதை தடுக்கவும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.