சில நாட்களாக, வருகிற அக்டோபர் மாதத்தில் தமிழகத்திலுள்ள வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்கிற தகவல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் உண்மையில், வருகிற அக்டோபர் மாதம் தமிழகத்தில் வார விடுமுறை நாட்கள் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே பண்டிகை கால விடுமுறை நாட்களாகும்.
அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, அக்டோபர் 19-ம் தேதி மிலாடி நபி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 3, 9, 10, 17, 23, 24, 31 ஆகிய தேதிகள் வங்கியின் வழக்கமான வார விடுமுறை நாட்களாகும்.
நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்பட்ட இந்த விடுமுறை நாட்களில் பிராந்திய பண்டிகை மற்றும் தேதிகளை பொறுத்து மூடப்படும்.
அதனடிப்படையில்தான், ஆர்.பி.ஐ அறிவித்திருக்கும் அக்டோபர் மாத விடுமுறை பட்டியலில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை (வழக்கமான 7 வார விடுமுறை நாட்களையும் சேர்த்து) வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.