மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியதன் ஓராண்டு நிறைவையொட்டி, செப்டம்பர்-27ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளின் அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) அறிவித்துள்ளது. திங்கட்கிழமை பாரத் பந்த் அமைதியாக இருக்கும் என்றும் பொதுமக்கள் குறைந்தபட்ச சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளது.
தனது வழிகாட்டுதலில், பாரத் பந்த் காலத்தில், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், சந்தைகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது. சாலைகளில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து அனுமதிக்கப்படாது மற்றும் பொது விழாக்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவைகள் உள்ளிட்ட அவசர சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும். என்று தெரிவித்துள்ளது.
பல எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஆகியவை ஆதரவளித்துள்ளன. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பந்த்க்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தமிழக அரசுகள், நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவை அறிவித்துள்ளன. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AlBOC) பாரத் பந்த்திற்கு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், அரசின் மூன்று சட்டங்களை ரத்து செய்யவும் அரசுக்கு இது கோரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் போராட்ட நடவடிக்கைகளுக்கு அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மாநில அமைப்புகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்