புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவிற்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6 என மொத்தம் 16 இடங்களில் அந்த கூட்டணி வெற்றி பெற்று. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் பாஜக 6 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், மேலும் 3 நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாஜகவின் பலம் 9 ஆக இருந்தது.
மேலும் இதுவரை 2 சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவளித்த நிலையில், தற்போது திருபுவனை சட்டப்பேரவை உறுப்பினர் அங்காளன் ஆதரவளித்துள்ளார். இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.