டெல்லி:-
டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் சிலர் இன்ஸ்டாகிராமில் ‘Bois Locker Room’ அல்லது ‘BoysLockerRoom’ என்ற பக்கத்தைத் தொடங்கி பாலியல் தொடர்பாகப் பேசி வந்திருக்கும் செய்தி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
டெல்லியில் உயர் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் இணைந்து இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 16,17 மற்றும் 18 வயதை சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் சில 14 வயதுள்ள மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் பாலியல் வன்கொடுமை (Gang-Raping) மற்றும் உடல் சார்ந்த விஷயங்கள் (Body Shaming/Slut Shaming) குறித்து மாணவர்கள் உரையாடி வந்துள்ளனர். கேட்க முடியாத விஷயங்களைக் கூட மிகவும் சாதாரணமாக மாணவர்கள் உரையாடி வந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிறுமிகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அந்தப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தங்களது வகுப்பு மாணவிகள் பற்றியும் பாலியல் ரீதியான உரையாடல்களை நடத்தியுள்ளனர்.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்கள் நடத்திய உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்டுகளை சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டதன் மூலம் வேகமாக இந்தச் செய்தி பரவத் தொடங்கியது.
இதில் அந்த மாணவர்கள் தங்கள் உறவுகொள்வது குறித்தும், அவர்களின் அழகு மற்றும் அங்கங்கள் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது குறித்து மிக மோசமாக உரையாடியுள்ளனர்.
அவர்களின் மோசமான உரையாடலில் ஒன்று “Bad dressing sense but good t**s”.
மேலும் சில பதின்வயது பெண்களின் புகைப்படங்களை அதில் பதிவிட்டு மற்றவர்களை பெண்களின் வயதை கண்டுபிடிக்கும்படி பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பான கண்டனங்களைப் பலரும் #BoysLockerRoom என்ற ஹேஷ்டேக்கில் பகிரத் தொடங்கியுள்ளனர்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், இந்த இன்ஸ்டாகிராம் குழுவில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில்:-
டெல்லி காவல்துறையினருக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்தச் சிறுவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக #MeTooIndia ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ள பதிவில்:-
16 17 வயதுடைய மாணவர்கள் சர்வசாதாரணமாக மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதைப் பற்றியும் அவர்களது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து எந்தவித குற்ற உணர்வோ பயமோ இன்றி இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலமாக பெண்கள் மிக மோசமான கலாச்சாரத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை தூக்கிலிடுவது ஆண்கள் மற்றும் சிறுவர்களிடம் எவ்வாறு பயத்தை ஏற்படுத்தும் என நீங்கள் மீண்டும் எங்களுக்குச் சொல்லுங்கள். மாநில அரசுகள் தங்கள் விரும்பும் அனைத்துக் குற்றவாளிகளையும் தூக்கிலிடலாம். ஆணாதிக்கம், உரிமைகள் மற்றும் ஆண்மை தொடர்பான அடிப்படை விஷயங்கள் குறித்து கவனிக்காவிட்டால் BoysLockerRoom தொடரும் என பதிவிட்டுள்ளது.
தற்பொழுது இந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் வைரலானது தொடர்ந்து அந்த பக்கத்தை பயன்படுத்திய மாணவர்கள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை டி-ஆக்டிவேட் செய்துள்ளனர்.