புதுடெல்லி:
கொரோனா தொற்று காரணமாக தற்போது மெயில்/எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் மற்றும் ஹாலிடே ஸ்பெஷல் என இயக்கப்படும் கோவிட்-19 சிறப்பு ரயில்களை நிறுத்தவும், வழக்கமான நேர அட்டவணை ரயில்களின் எண்ணிக்கை, கட்டணம் மற்றும் வகைப்படுத்தலை மீட்டெடுக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு முந்தைய சேவை நிலைகளுக்கு படிப்படியாகத் திரும்புவதற்கான முயற்சியில், இரயில்வே துறை ஈடுபட்டுள்ளது.
கொரோனா பரவல் தற்போது குறைந்த நிலையில், அதிக கட்டணத்துடன் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சிறப்பு ரயில் திட்டத்தை கைவிடுவதாக ரயில்வே ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
மேலும், இந்த ரயில்கள் அனைத்தும் கொரோனா காலத்துக்கு முன்பாக இருந்ததுபோல் சாதாரண கட்டண ரயில்களாக மாற்றப்படும் என்றும் ரயில்வே ஆணையம் அறிவித்தது.
எனவே பயணிகள் டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் ரத்து, விசாரணை, உடனடி டிக்கெட் விநியோகம் உட்பட பல்வேறு வகைகளுக்கு ஏற்றப்படி கம்ப்யூட்டரில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.
14ம் தேதி முதல் வரும் 21ம் தேதி வரையில் 7 நாட்களுக்கு, இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 வரையில் 6 மணி நேரத்துக்கு முன்பதிவு, ரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இயங்காது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.