திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும் என்று கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் (Kerala) கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையால் நடந்த கொலை, தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் வரதட்சணை முறையை ஒழிக்க, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் (Arif Mohammed Khan), புதுமையான முயற்சியை பரிந்துரைத்தார். இது மாநில அரசால் ஆதரிக்கப்பட்டது.
அதன்படி மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் திருமணத்தின் போது வரதட்சணை கேட்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதிமொழியில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், தங்கள் திருமணத்தில் வரதட்சணையை ஏற்கவோ, கேட்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டோம் என்று ஒரு ‘அறிவிப்பு படிவத்தில்’ கையெழுத்திட வேண்டும் என்று பல்கலைக்கழக இணை கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், உறுதி மொழியை மீறி வரதட்சணை வாங்கினால் பல்கலைகழகத்தில் வாங்கிய டிகிரி பட்டம் ரத்து செய்யப்படும் என கோழிக்கோடு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கேரள மீன்வள மற்றும் கடல்சார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் உட்பட, 386 மாணவர்கள், வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை கொடுக்க மாட்டேன் என கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.