புதுடெல்லி:-
தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நேரத்தில் மக்களுக்கு சிறப்பாக உணவு வழங்கி வருவதற்காக மத்திய அரசு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறது.
ஊரடங்கு காலத்தில் 1 கோடியே 40 லட்சத்து 38 ஆயிரம் இட்லி வழங்கப்பட்டுள்ளது. 53 லட்சத்து 24 ஆயிரம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் என கலவை சாதங்களும், 37 லட்சத்து 85 ஆயிரம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளது, மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
ஊரடங்கால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விளிம்பு நிலை மக்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் ‘அம்மா’ உணவகங்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள உணவு பொருட்கள், சமையல் அறைக்கு சென்று சுகாதார முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, உணவை சாப்பிட்டு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.