உலகின் அதிக பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் குறித்த தொடர் அதிருப்தியில் உள்ள மத்திய அரசு தற்போது தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ் அப் செயலியை போல புதிய இரண்டு செயலியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Sandes என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலிகள் முழுக்க முழுக்க பாதுகாப்புடனும், தகவல் திருட்டுக்கு இடம் கொடுக்காத வகையிலும் இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த செயலியை மத்திய அரசு உருவாக்குகிறது என்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாட்ஸ்அப் நிறுவனத்தில் சமீபத்தில் தனிநபர் தகவல்கள் குறித்த சர்ச்சை தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில், அதற்கு மாற்றாக இந்த செயலிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும், தற்போது இது பரிசோதனையில் இருப்பதாகவும், மத்திய மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.