புகழ் பெற்ற கதக் நடன கலைஞரான பிர்ஜு மகாராஜ் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாத.. என்ற பாடலுக்கு நடனம் வடிவமைத்தவர் பிர்ஜு மகாராஜ். அவரிடம் கற்ற கதக் நடனத்தின் மூலமாக தான் கமல் ஹாசன் அந்த பாடலில் அசத்தியிருப்பார்.
தலைசிறந்த கதக் கலைஞரான இந்தியாவிலேயே உயரிய இரண்டாவது பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். 83 வயதான பிர்ஜு மகாராஜ் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு உணவுக்கு பிறகு பேர்த்தியுடன் விளையாடிக்கொண்டிருந்த பிர்ஜு மகாராஜ், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
கலை உலகில் தலைசிறந்த ஆளுமையாக திகழ்ந்த பிர்ஜு மகாராஜின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பழம்பெரும் கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகாராஜின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர் ஒரு சிறந்த கலையின் தூதராக இருந்தார். மேலும் அவர் ஒரு வளமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.