கோழிக்கோடு:-
நேற்று இரவு நடைபெற்ற விமான விபத்தில் பலியான துணை பைலட் தனது மனைவிக்கு இன்னும் சில தினங்களில் பிரசவமாக உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு 7.40 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கனமழை காரணமாக நிலைதடுமாறி 30 அடி பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டு பாதியாக உடைந்து சுக்கு நூறானது. இதுவரை இந்த விமானத்தில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றிய தலைமை விமானி தீபக் வசந்த் சாதே (59) மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் (32) ஆகியோர் இதில் உயிரிழந்தனர்.
அகிலேஷ் குமாரின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு குழந்தை பிறக்க சில தினங்களே உள்ள நிலையில் நேற்று இரவு நடைபெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வெளிநாடுகளில் கொரோனோ ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பலரை இதுவரையில் மீட்டு தாயகம் திரும்ப அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அகிலேஷ் குமார். கடந்த மே 8ம் தேதி இதேபோன்று துபாயில் இருந்து இந்தியர்களை வந்தே பாரத திட்டத்தின் கீழ் ஏர் இந்திய விமானத்தில் ஏற்றிக் கொண்டு இதே கோழிகோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தான் வந்து இறங்கினார். அப்போது அகிலேஷ் குமார் உள்ளிட்ட குழுவினருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வெறும் மூன்றே மாதங்களில் அதாவது நேற்று ஆகஸ்ட் 7ம் தேதி இரவு நடைபெற்ற விமான விபத்தில் அகிலேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் 170 உயிர்களை காப்பாற்றிய இந்த இரண்டு விமானிகளும் ஹீரோக்கள் என்பதில் சந்தேகமில்லை.